Selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே! – சுமந்திரனின் கருத்துக்கு ரெலோ பதில்

Share

“விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே. விடுதலைப்புலிகளை வன்முறையாளர்கள் போல் காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கத் தகுதியுள்ளதா?”- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..

வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவோம்” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழரசுக் கட்சி சந்தோசப்படும் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தெரியும்.

ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறை எனக் குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்?

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழரசுக் கட்சியின் கருத்தா என்பதை அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனின் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என்பதை இரா.சம்பந்தனும் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயக ரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டியபோதும், நாம் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்போது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்குப் பதிலடி கொடுப்போம்.

எம்மைத் துரோகிகள் போல் சுமந்திரன் பொய்யான கருத்தைத் தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப்புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளுக்கும் நன்கு தெரியும். வவுனியாவில் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாகக் கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் விடுதலைப்புலிகளையும் பற்றிப் பேசும் தகுதி சுமந்திரனுக்குக் கிடையாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...