தையிட்டி விகாரை விவகாரம்: மக்களை அணிதிரள அழைப்பு

tamilni 133

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களை அணிதிரள அழைப்பு

தையிட்டியில் விகாரைக் காணியைச் சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அங்கு அணிதிரள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் மேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம், பலாலி – தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாகப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

தையிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர் என்று நம்பத் தகுந்த தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக இருந்தால் நிரந்தரமாகவே அந்தக் காணிகள் சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விடும்.

ஆகவே சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை எதிர்த்தும் நில அளவைப் பணிகளை எதிர்த்தும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தமிழ் மக்கள் அனைவரும் அங்கே திரண்டு தமது எதிர்ப்பைப் பலமாகக் காட்டி அளவீட்டுப் பணிகளை தடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் எழுந்திருக்கின்றது.

எனவே, தமிழ் மக்கள் அனைவரும் எமது கோரிக்கையை ஏற்று செவ்வாய்க்கிழமை காலையில் அந்த இடத்துக்கு அணிதிரள வேண்டும்.

எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென அன்புரிமையோடு கேட்டு நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version