தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“4 இலட்சம் மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது 70 ஆயிரம் மக்கள்தான் இருப்பதாகக் கூறி உணவு அனுப்பி உணவில்லாமலே சாகடிக்கப்பட்ட மக்கள் காயங்களுக்கு மருந்துகள் இல்லாமல் கொல்லப்பட்டபோது பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அதற்குள் அனைவரையும் செல்லுமாறு கூறி விட்டு அந்த இடத்துக்குள் கொத்துக்குண்டுகளையும் பறாஜ் குண்டுகளையும் வீசி எமது மக்களை இந்த அரசு கொன்றபோது இந்தச் சிங்கள மாணவர்கள், சிங்கள சகோதரர்கள் எல்லோரும் அவற்றை வெறித்தனமாகப் பார்த்தார்கள் பயங்கரவாதமாகப் பார்த்தார்கள்.
தமிழர்களை அழிப்பதை ஏற்றுக்கொண்டார்கள். சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் பாற்சோறு கொடுத்துக் கொண்டாடினார்கள். எல்லோரின் வீடுகளிலும் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டன. சிங்கள மக்கள் எல்லோரும் அவற்றை மகிழ்ச்சியோடு பார்த்தார்கள். 69 இலட்ச சிங்கள மக்கள் வாக்களித்து கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி ஆக்கினார்கள். இவை எல்லாம் நடந்தவை,
இப்போது நாங்கள் போய் அவர்களோடு சேர்ந்துதான் எங்களுடைய இளைஞர்களும் சேர்ந்துதான் போராட வேண்டும் என்றால் போகும் இளைஞர்களிடம் நான் பகிரங்கமாகக் கேட்கிறேன் இத்தனை நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் தெருக்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு நாள் ஆயிரம் இளைஞர்கள் கிளிநொச்சியில் திரளுங்கள். அதற்கு எங்கள் இளைஞர்கள் தயாரில்லை.
கைகளால் ஒப்படைக்கப்பட்ட கணவன்மார் கைகளால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் யாருமே இல்லை. எங்கு என்றும் தெரியாது. இவர்களைத் தேடியவாறு இருக்கும் தாய்மார்களுடன் ஆயிரம் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து போராடுங்கள் என உங்களைப் பகிரங்கமாகக் கேட்கின்றேன்.
சிங்கள இளைஞர்களின் போராட்டத்துக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் பற்றி பேசினால் அந்த இளைஞர்களின் பாதங்களுக்கு பூப்போட்டு வணங்கவும் தயாராக இருக்கின்றோம்.
நாங்கள் போராடியது எங்களுடைய உரிமைகளுக்காக. இழந்துபோன இறைமைகளை மீட்டெடுப்பதற்காக. எங்களுடைய மண்ணில் சுயாட்சி முறையிலான உரிமையை வென்றெடுக்க நாங்கள் போராடுகின்றோம். இது முற்றுமுழுதான உரிமைக்கான போராட்டம். உயிர் வாழ்தலுக்கான போராட்டம். அடுத்த பரம்பரைக்கான நிம்மதிக்கான போராட்டத்தைத்தான் நாம் இந்த மண்ணில் நடத்துகின்றோம்.
நாங்கள் எரிபொருளுக்காகப் போராடவில்லை; எரிவாயுவுக்காகப் போராடவில்லை. நாங்கள் மின்சாரத்துக்காகப் போராடவில்லை. உணவுக்காக நாங்கள் போராடவில்லை. இவை இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். நாங்கள் யாருடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவில்லை.
நீங்கள் போராடுவது ஒரு கொடுங்கோலனுக்கு எதிராக. இனப்படுகொலையாளிக்கு எதிராக. மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச என்கின்ற இருவரும் இந்த மண்ணில் தமிழ்த் தேசிய இனத்தைப் படுகொலை செய்தவர்கள். நாம் உங்களுக்கு முதலே – 2019 ஆம் ஆண்டிலேயே இவர்களுக்கு எதிராகப் போராடியிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் சிங்கள மக்கள் போராடியபோது தமிழர்கள் ஆதரவு நல்கியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினை தீர்ந்ததும் தமிழர்களுக்கு எதிராக மாறியிருக்கின்ற பல சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெற்றிருக்கின்றன” – என்றார்.
Leave a comment