2026ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (க.பொ.த உயர்தர) பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளைப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள தகுதிவாய்ந்த மாணவர்களுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.
அதேநேரம், உயர்கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிக்கும் முக்கிய பரீட்சையான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் 2026 ஓகஸ்ட் 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, செப்டம்பர் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் இந்த முறையான முன்கூட்டிய அறிவிப்பானது, மாணவர்கள் தங்களை அசௌகரியங்களின்றித் தயார்படுத்திக் கொள்ளப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பரீட்சைகளுக்கான பாடவாரியான உத்தியோகபூர்வ கால அட்டவணைகள், விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறைகள் மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் அடங்கிய விசேட அறிவிப்புகள் எதிர்வரும் நாட்களில் பரீட்சைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன. அதிபர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக இவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
எனவே, இந்த ஆண்டுப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும், தங்களது பாடத்திட்டங்களை முன்கூட்டியே மீளாய்வு செய்து முறையான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறும், பெற்றோரக்ள் பிள்ளைகளுக்கான உகந்த சூழலை உருவாக்கிக் கொடுக்குமாறும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.