விடுதலைப்புலிகளின் தலைவருடனான சீமானின் புகைப்படம் : மீண்டுமொரு சிக்கல்

2 33

விடுதலைப்புலிகளின் தலைவருடனான சீமானின் புகைப்படம் : மீண்டுமொரு சிக்கல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்துள்ள மனுவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும் அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

அவர் எடிட் செய்யப்பட்ட படங்களை பொது வெளியில் பயன்படுத்தி வருவதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது ரஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார்.

எனவே செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மனுவானது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Exit mobile version