மணல் அகழ்வு – மன்னாரில் போராட்டம்!

image 1708b52626 1

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இடம்பெற்று வரும் இயற்கை விரோத செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், அதன்  தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், கவனயீர்ப்புப் போராட்டம், மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (30) காலை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக ஆறுகளை அண்டிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அகழப்பட்டு, ஏனைய மாவட்டங்களுக்கு கடத்தப்படுவதாகவும், உரிய அனுமதியின்றி காடுகள் அழிக்கப்பட்டு, கிராம பகுதிகளில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனை தடுத்தி நிறுத்த வேண்டிய அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாகவும் பொலிஸார் சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இவ்வாறான இயற்கை விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரரிகள் கோரினர்.

இந்தப் போராட்டத்தில் அருட்தந்தை ஜெபாலன் குரூஸ், பேசாலை முருகன் கோவில் பிரதம குரு தர்மகுமார குருக்கள், நெப்ஸோ அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ், நானாட்டன் பிரதேச சபை முன்னால் தவிசாளர், மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றும் நானாட்டன் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

“சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே லஞ்சம் வாங்காதே”, “மன்னாரை பாலைவனமாக்க போகின்றீர்களா?”, “சட்டத்தரணிகளே மண் மாபியாக்களை காப்பாற்றாதே”, “அரசாங்க அதிபரே உங்கள் மெளனம் கலையட்டும்”, “விவசாய நிலங்கள் உவர் ஆகிவிட்டன” மற்றும் “புவிசரிதவியல் திணைக்களமே விழித்துக்கொள்ள மாட்டீர்களா” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் மண் அகழ்வுக்கு எதிராகவும் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

#SriLankaNews

Exit mobile version