21 15
இலங்கைசெய்திகள்

இலட்சக்கணக்கான மக்களின் வரிகள் குறைக்கப்படும்: சஜித் பிரேமதாஸ உறுதி

Share

இலட்சக்கணக்கான மக்களின் வரிகள் குறைக்கப்படும்: சஜித் பிரேமதாஸ உறுதி

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு மக்கள் வழங்கினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பும் புதிய இணக்கப்பாட்டை எட்டுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் சஜித் பிரேமதாஸ உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையற்ற வரிச்சூத்திரம் விரைவில் மாறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

அநுரகுமார திஸாநாயக்கவின் அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த வரிச்சூத்திரத்தை மாற்றும் என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் கூறியதை, கூறுவதை வெறும் பேச்சில் மாத்திரமல்லாது நடைமுறையிலும் மாற்ற வேண்டும்.

இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்த்திருக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தின. அந்தக் கலந்துரையாடல்களில், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த வரிச்சூத்திரம் நியாயமற்றது, எனவே அது மாற்றியமைக்கப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக தெரிவித்தோம்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அரச வருவாயை விட அதிக வருவாயைப் பெறும் இந்த நியாயமற்ற வரி சூத்திரத்தை மக்கள் ஆணை மூலம் மாற்றியமைப்போம் என்று தெரிவித்தோம்.

இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினால் அந்த ஆணையுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் புதியதொரு இணக்கப்பாட்டை எட்டுவோம். தற்போதுள்ள சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாடுகள் மாற வேண்டும், மாற்றியமைக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் உள்ள மக்கள் விரோத விதிகளை மாற்றி, மக்கள் பக்கம் இருந்து மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தாது, சர்வதேச நாணய நிதியத்துடன் மக்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் புதிய இணக்கப்பாட்டை எட்டுவோம்.

ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் கைகோர்த்து, சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை மாற்றியமைக்கும் செயல்முறைக்குப் பக்க பலத்தைக் கொடுப்போம்.

கர்ப்பிணித் தாய் முதல் குழந்தை, சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வரிச்சூத்திரம் நாட்டில் அமுலில் காணப்படுகின்றது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசே பொறுப்பாகும்.” – என்றார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...