நாட்டில் கடன் செலுத்துகையை தவறவிட்டதால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில், இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
கடந்த 2021ம் ஆண்டு முதல் சில அரசியல்வாதிகள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை கடன் செலுத்த வேண்டாம் என கோரியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கடன் செலுத்தாது அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்ளுமாறு கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் கடன் செலுத்த வேண்டாம் என கூறியவர்கள் தற்பொழுது சத்தமில்லாம் இருக்கின்றார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் அரசாங்கம், அந்தக் காலத்தில் கடனை ஏதாவது ஓர் வகையில் செலுத்தியதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் கடன் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டான்டர்ட் என்ட் புவர் (standard and poor’s – S&P) என்னும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையை டி தரத்திற்கு தாழ்த்தியுள்ளதாகவும், இது வங்குரோத்து நிலையை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறான நிலையில், கடன் செலுத்துகையை தவிர்க்கும் புதிய கொள்கையொன்றை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்டவர்கள் அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அஜித் நிவாட் கப்ரால் தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளால் தற்பொழுது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடன் செலுத்த முடியாத நிலைமைகளினால், இலங்கையின் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பும் சீர்குலையும் ஆபத்து காணப்படுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment