கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

இந்நிலையில், குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – அம்பாள் குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான நிலையில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலையாளி மற்றுமொரு நபரின் உதவியுடன், மோட்டார் சைக்கிளில் சடலத்தை எடுத்து சென்று வீசியதாக குறித்த இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
3 வருடங்களுக்கு முன்பாக லண்டனில் இருந்து வந்து கிளிநொச்சி அம்பாள் குளம் உதயநகர் பகுதியில் உள்ள காணியை பார்ப்பதற்காக குறித்த பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews