புகலிடம் திரும்பினார் பிள்ளையார் – அகற்றப்பட்டது அந்தோனியார் சிலை!
மன்னார், மடு – பரப்புக்கடந்தான் வீதிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து 4 km தூரத்தில் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை ஒரே இரவில் மாயமாகியதுடன், குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் அவ்விடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .
இந் நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல் நேற்றையதினம் (13) சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார் .
அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தோனியார் சிலையை பொலிஸார் அகற்றியதுடன். அகற்றப்பட்ட சிலையை மடு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தற்போது பிள்ளையார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் குறித்த பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.குறித்த பகுதி காட்டுப்பகுதி என்பதனால், அப்பகுதியால் செல்பவர்கள் அனைவரும், பிள்ளையார் சிலையை வணங்கி விட்டு செல்வது வழக்கம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a comment