கிளிநொச்சி – பளை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிப் பயணித்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில், மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றிப் பயணித்த வாகனமே, இன்று (03) காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இயக்கச்சி பகுதியிலிருந்து பளை நோக்கிச் சென்ற குறித்த கப் வாகனம், புதுக்காட்டு சந்தியை அண்மித்து ஏ9 பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த வாகனத்தின் பின்னாள் அமைக்கப்பட்ட பாதுகாப்புக் கூடாரம் வாகனத்தை விட்டு அகன்றபோது மாணவர்களும் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் காயமடைந்த 11 மாணவர்களும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் . அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment