ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, அரசு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைக்க அவதானம் செலுத்தி வருகிறது. மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாது எனத் தெரியவருகிறது.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவை ஒரு சாதகமான வாய்ப்பாகக் கருதி, விரைவில் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசு எதிர்பார்ப்பதாக அறியப்படுகிறது.
இதற்கிடையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடருக்கு மத்தியில் சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் நோக்கம், எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஒரு உறுதியான முடிவை எடுப்பதேயாகும் என்று தெரியவந்துள்ளது.