அதிக விலைக்கு பொருட்கள்! – கொள்வனவை தவிருங்கள் என்கிறார் அரச அதிபர்

pearl one news Kanapathipillai Mahesan

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவரிடம் பொருட்களை கொள்வனவு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்றல், அதிக விலைக்கு எரிபொருள் விற்றல் தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடும் எனவே அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்கக்கூடாது.

பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு பொதுமக்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. அவ்வாறு அவர்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

மேலும் யாழ் குடாநாட்டிற்கு தேவையான எரிபொருளின் அளவு முன்னரை விட அதிக அளவில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கிறது. எனினும் மேலதிகமாக கிடைக்கும் எரிபொருள் எங்கே செல்கின்றது என்பது தெரியவில்லை.

மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போது பிரச்சினையாக காணப்படுகிறது. அதற்குரிய தீர்வு விரைவில் கிடைக்கும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version