இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர்களைக் கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைதானவர்களிடமிருந்து, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கைப்பேசிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியின் அதிகாரி ஒருவர் இரத்மலானை ஆதர் பிரதேச பகுதியில் 1,000 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்திருந்தார்.
குறித்த சந்தேக நபரிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடம் மற்றும் போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இந்த வீடு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன், குறித்த வீட்டின் நுழைவாயிலில் “சுபுன் சர்பயா நுழைவது தடை” என எழுதப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்களும் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் 33, 22, 24, 51, 36 ஆகிய வயதுடைய இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

