ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ரம்புக்கனைப் பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
போராட்டத்தின்போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பிரயோகித்துள்ளனர்.
எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காகப் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஓட்டோக்கு குழுவொன்று தீ வைத்துள்ளது எனவும், எரிபொருள் தாங்கி வாகனத்துக்குத் தீ வைக்க முற்பட்டபோது குழுவினரைக் கலைக்கும் முயற்சியாக இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் ரம்புக்கனைப் பிரதேசத்தைச் சேர்ந்த குருவிட்டகே டொன் சமிந்த லக்சான் (வயது 42) என்ற நபரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#SriLankaNews