தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்குள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவை தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்
நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.
அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
தாய்லாந்து அரசும் அவருக்கு தற்காலிக விசாவே வழங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.
முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் கோட்டாபய வந்திறங்க முடிவு செய்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அவர் பாங்காக் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கியுள்ளார்.
இங்கிருந்து பெயர் வெளியிடப்படாத தனியார் ஹோட்டலுக்கு கோட்டாபய ராஜபக்ச அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில், தாய்லாந்து சிறப்பு பிரிவு பொலிஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர் எனவும், அவரது பாதுகாப்பு கருதி அவரை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது
இவ்வாறான நிலையிலேயே, அவர் தாய்லாந்தில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி கோரியுள்ளார்.
தாய்லாந்தில் இருக்கும் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அந்நாட்டுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் தாய்லாந்து அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment