இராணுவ ஆட்சியை நாட்டில் கொண்டுவருவதற்கு ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பயன்படுத்தினார் என்று
கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
நாட்டில் ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம். இராணுவ ஆட்சியை நாட்டில் கொண்டுவருவதற்காகவே சிறையில் இருந்த தேரரை கொண்டு வந்து தனது ஆயுதமாக கோட்டா பயன்படுத்தி வருகின்றார்.
இராணுவ தளபதிகளை அமைச்சின் செயலாளர்களாக அவர் நியமித்துள்ளார். கிட்டத்தட்ட 14 அமைச்சின் செயலாளர்கள் இராணுவ தளபதிகள். அத்துடன் ஆளுநர், திணைக்கள தலைவர்களும் அவ்வாறே நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்தபெருமானின் அவதாரமாகத் தன்னை வெளிப்படுத்தும் தேரர் தற்போது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அவாதாரத்தை எடுத்துள்ளார்.
தற்போது நாம் அனைவரும் இராணுவ ஆட்சியில் தான் இருக்கிறோம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் இது ஆபத்தானது. ஏனென்றால் 1970களில் கதிர்காமத்து அழகி மன்னம்பேரியை நிர்வாணமாக்கி கொன்றவர்கள் இராணுவத்தினர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரேமதாச காலத்திலும் சுமார் 50 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்காக அப்போது பிரேமதாசவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச சர்வதேசம் வரை சென்றிருந்தார். ஆகவே அவ்வாறு இருக்கையில், இராணுவத்துக்கு சிங்களம், தமிழ் என்ற வேறுபாடு இல்லை. துப்பாக்கி முனையில் அனைவரையும் கொல்வதே அவர்களின் நோக்கம்.
தமிழர்கள் இராணுவ ஆட்சியில் வாழ்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். ஆகவே தமிழர்களுக்கு இது புதிய விடயமல்ல.
ஆனால் சிங்கள மக்கள் தற்போது துன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
#SrilankaNews
Leave a comment