இத்தாலியில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு

6 55

இத்தாலியில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு

இத்தாலியில் இலங்கையர்களுக்கு அதிகளவான வேலைவாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் கலந்துயாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டன.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிரான்கோவிக் சுட்டிக்காட்டினார்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கை மக்கள் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் இலங்கைக்கு அந்நியச் செலாவணியை அனுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இத்தாலி தூதரகம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தரும் இத்தாலி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய சபாநாயகர், சுற்றுலாத்துறை தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார்.

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றியும் சபாநாயகர் தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

Exit mobile version