நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெற்விங் ஹோட்டலில் யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் வடபகுதி பொருளாதார முன்னேற்றத்திற்கு தமிழகத்துடனான தொடர்பு முக்கியமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு இது வணிகவிருத்திக்கு அவசியமானது போன்ற விடயங்கள் யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்தை மீளத் திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையடங்கிய மகஜர் இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் கையளிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
‘இந்த விடயங்களை டெல்லிக்கு எடுத்துச்சென்று நிச்சயமாக விமானநிலையத் திறப்பு மற்றும் கப்பல்போக்குவரத்து என்பவற்றிற்கு ஏற்பாடுகள் செய்வதாக அண்ணாமலை உறுதியளித்தார்.
சந்திப்பில் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் எஸ். யுகெந்திரா, செயலாளர் தே.தேவானந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான எஸ். இன்பரூபன்,எஸ். திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
#SriLankaNews