‘டித்வா’ சூறாவளிப் பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 25,000 நிதியுதவி பெறத் தகுதியானவர்கள் எனத் தெரிவானோரின் பெயர்கள் அடங்கிய விபரம் இன்று (10.12.2025) முதல் பிரதேச செயலக ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினை பொதுமக்கள் எவரும் பார்வையிட முடியும்.
பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் இயங்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ். கபிலன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புகார்களைத் தெரிவிக்கும்போது உரிய ஆதாரங்களுடன் அவற்றைத் தெரிவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

