தமிழீழ இறுதி யுத்தத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு எந்தவிதாரண மற்றும் அவரோடு இணைந்து செயற்பட்டவர்களே பொறுப்புக் கூற வேண்டும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிட்டு வருகின்ற நிலையிலேயே வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது இசைப்பிரியா தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நான் இராணுவத் தளபதியாக இருக்கும் போது பெரும் தொகையான மக்கள் சரணடைந்தனர்.
மக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் 12,000 பேர் துப்பாக்கிகளை வைத்து சயனையிட் குப்பிகளை வீசிவிட்டு சரணடைந்தனர்.
நாங்கள் அவர்களை எங்களின் மருந்து ஆடைகளை வழங்கி பாதுகாத்தோம். ஆனால் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இரு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இசைப்பிரியா தொடர்பிலும் முறைப்பாடுகள் இருந்தன. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சிலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரியவந்தது.
அதில் இசைப்பிரியாவை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு இருந்தமை நான் அறிவேன். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த எந்த விதாரண தொடர்பில் பேசப்பட்டது.
மேலும் வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஜகத் ஜயசூரியவால் பலர் கடத்தப்பட்டதாகவும் பல முரணான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவ சிப்பாயிகள் தெரிவித்திருந்தனர்.
அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்திலும் விவாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த இசைப்பிரியாவின் சம்பவத்தின் போது நான் இராணுவத் தளபதியாக இருக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச தான் ஜகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நிமியமித்தார். நான் வேண்டாம் என சொன்னேன். அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் இருப்பதால் அது வேண்டாம் என்றேன்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சிரித்துக் கொண்டு முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நியமனம் கடிதம் வழங்கும் போது கூறினார். இதற்கு அனைத்துக்கும் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிலர் சண்டியர்களாக செயற்பட்டனர். அவர்கள் தான் புனர்வாழ்வு மற்றும் ஏனைய செயற்பாடுகளில் முன்னணி வகித்தனர். அவர்களே பல முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.