இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் இலங்கைக்கு பக்கபலம்: அலி சப்ரி

24 664c20f673f18

இந்தியா (India), பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தி தளம் ஒன்றிற்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இடையில் சிறந்த உறவு பேணப்படுகின்றது.

இந்நிலையில், துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிற உட்கட்டமைப்புக்களில் இலங்கை, இந்தியாவிடம் இருந்து அதிக முதலீடுகளை எதிர்பார்க்கிறது.

இதன் காரணமாக, இரண்டு நாடுகளுக்கும் இணக்கமான சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பன்முகக் கூட்டாண்மை நிலவுவதனால் நாகரீக உறவுகளும் பிணைந்துள்ளன.

குறிப்பாக பௌத்தர்கள், தென்னிலங்கையர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமூகத்தினரும் இந்திய நாகரீகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், இராமாயணப் பாதை திட்டமானது இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் மக்களிடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்துவதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

அதேவேளை, சீனாவின் (China) கப்பல்கள் தொடர்பில் இந்தியா கவலைகளை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களைப் இலங்கை பாதுகாக்கும்.

மேலும், சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது போன்று இலங்கையும் அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது” என கூறியுள்ளார்.

Exit mobile version