இலங்கையில் இந்தியாவின் (India) அதானி குழுமத்தால் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்கள் குறித்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் சிறிலங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கிரீன் எனர்ஜி திட்டத்தின் அலகு விலை “மிகவும் விலை உயர்ந்தது” என்று சில உள்ளூர் வல்லுநர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இனையடுத்து, தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து அதானி திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் சிறிலங்கா கோரியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் அதானி குழுமத்தின் திட்டங்கள் தொடர்பில் குறித்த அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமையால் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆபத்துக்களை ஏற்படுத்தப்படலாம் என ட்ரான்ஸ்பரன்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் வடக்கு மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் திட்டத்துடன் தொடர்புடைய வெளிப்படைத்தன்மை, சட்டபூர்வமான தன்மை, மதிப்பீட்டு செயல்முறை, விலை நிர்ணயம், அரசாங்கத்தின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான முக்கியமான தகவல்களும் குறித்த அமைப்பால் கோரப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி (இலங்கை) லிமிடெட் மன்னாரில் 250 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு தற்காலிகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்தநிலையில், மன்னாரில் உள்ள அதானியின் ஆலைக்கு அடுத்ததாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ள சிறிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளுக்கான ஏலங்களைத் திறப்பதை அரசாங்கம் தாமதப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இது குறைந்த விலையை மறைக்கவே மேற்கொள்ளப்படுவதாக உள்ளூர் முதலீட்டார்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, உலகின் முக்கியமான புலம்பெயர்ந்த பறவைகளின் வழித்தடங்களில் ஒன்றான மன்னார் வழித்தடத்தில் காற்றாலை விசையாழிகள் நிறுவப்படுவதால், மீளமுடியாத சூழலியல் சேதம் குறித்து மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளமை பற்றியும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.