சுகாதார விதிமீறி கும்பாபிஷேகம் – 6 பேருக்கு தொற்று!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சுகாதார விதிமுறைகளை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா ஓமந்தை நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப்பிரிவிடம் அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய கொரோனாப் பரவல் காரணமாக 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
ஆனால் ஆலயத்தில் 20 பேருக்கு மேல் ஒன்றுகூடியுள்ளனர் எனவும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு நின்ற 20 பேரிடமும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் ஆலயக் குருக்கள் உட்பட 6 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
Leave a comment