லொஹான் விவகாரத்தில் அரசு கண்துடைப்பு நாடகம்! – விக்னேஸ்வரன் காட்டம்
லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த கொலைமிரட்டல் அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் செயற்பாடானது கண்துடைப்பு நாடகமே. உண்மையில் குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை.
இதனை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் குற்றங்கள் புரிபவர்களுக்கு தண்டனை கிடைக்கப்போவதில்லை. அவர்கள் மிகக் கேவலமான குற்றங்களைப் புரிந்துவிட்டு தமது பதவியை இராஜினாமா செய்து எதுவும் நடக்காதது போல சுதந்திரமாக சுற்றி திரிவர்.
ஹெலிகொப்டர் மூலம் கடந்த 12 ஆம் திகதி அநுனநராதபுரம் சிறைக்கு பயணம் செய்து நன்றாக குடித்துவிட்டு சிறைக் கைதிகளை சிறைக் கூண்டுக்கு வெளியே வரச் சொல்லி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் லொஹான் ரத்வத்த. சிறைக் கைதிகளை வெளியே அழைத்து எந்தத் தீங்கும் விளைவிக்கலாம் என்றாகிவிட்டது.
இது தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயற்பாடாகும். பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் இடையே பிளவு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. லொஹான் ரத்வத்த உடன் கைது செய்யப்பட வேண்டும் உடனே சம்பந்தப்பட்ட சி.சி.ரி.வி காணொலி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
லொஹான் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும் விசாரணைகளின் போது தமிழ் அரசியல் கைதிகள் சாட்சிகளாக உண்மை கூறினாலும் அவர்களின் சாட்சியம் பக்கச் சார்புடையது எனத் தெரிவித்து அவரை விடுதலை செய்யும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன என அவரது யறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment