மே – 9 சம்பவத்திலிருந்து அரசு பாடம் கற்கவில்லை – சஜித் அணி

1559717879 Nalin Bandara 3 1

நாட்டு மக்கள் அரசுமீது கடும் கோபம் கொண்டுள்ளனர். பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கறுப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசைவலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள சாபம் நீங்கும். தற்போது கிணற்றுக்குள் வசிப்பது எவ்வாறு என்பதை அரசு கூறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் மக்களின் தேவை அதுவல்ல. கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கு கோட்டாபய தலைமையிலான அரசுபதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வகட்சி அரசை அமைக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் , எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் பொறுமையிழந்துள்ளனர். மதத் தலைவர்களுக்கு கூட கட்டுப்படும் நிலைமையில் அவர்கள் இல்லை. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்திலுள்ளனர்.

மக்கள் அடுத்து என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்று கூற முடியாது. அடுத்த மாதம் கறுப்பு ஜூலையாக பதிவாகக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. இதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசை வலியுறுத்துகின்றோம்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களிலிருந்தும் கூட இந்த அரசு பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆட்சியாளர்களை பதவி விலக்குவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடனான நட்புறவில் இல்லை. அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும். அதற்கான இயலுமை இந்த அரசிடம் இல்லை – என்றார்.

#SriLankaNews

Exit mobile version