இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை

25 5

இலங்கையில் ராஜபக்சர்களின் பரிதாப நிலை

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்றிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் இன்று முற்றாக மக்களால் வெறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட மாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்சவும் பொதுத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது பெயர் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெறவில்லை.

தேர்தலில் போட்டியிடாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தனது ஆதரவை வழங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலை பிரதேசத்திலும் நிப்புன ரணவக்க மாத்தரையிலும் போட்டியிடவுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ஆகியோரின் பெயரும் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version