ஆவா குழுவை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து போதைப்பொருள் , வாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை அவர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என தேடப்பட்டு வரும் நல்லூர் அரசடி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றார் என பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த நபர் தனது நண்பர்களுடன் காரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அவர்களின் காரை பின் தொடர்ந்து சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் பரமேஸ்வர சந்திக்கு அருகில் குறித்த காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இந்த சோதனையில் காருக்குள் இருந்து 3 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் , வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காரில் பயணித்த நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Leave a comment