கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அதிகாரப்பூர்வமாகச் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக, எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் கடற்படைத் தளபதிக்கு உத்தியோகபூர்வமாக நீதிமன்ற அழைப்பாணை (Summons) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரமானது கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கொழும்பு, கொட்டாஞ்சேனை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவந்த தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேர் கப்பம் கோரி கடத்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகும். குறித்த இளைஞர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விரிவான விசாரணைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் விவகாரத்தின் பிரதான சந்தேக நபரான கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி (நேவி சம்பத்) என்பவர், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பி ஓடுவதற்கும் தலைமறைவாவதற்கும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிதியுதவி வழங்கி மறைமுகமாக உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளர்களை அச்சுறுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த வழக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த நீதிமன்ற விசாரணையின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் விபரங்கள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.