யாழ்ப்பாணம்- பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில் நியந்தன் ரித்திக்குமார் (வயது-8) என்ற சிறுவனே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;
குறித்த சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சிறுவன் தோட்டக்காணியில் பட்டம் ஏற்றி விளையாடிவிட்டு, சகோதரியுடன் இணைந்து தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளான்.
இதனையடுத்து சகோதரி உறவினர்களிடம் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, உறவினர்கள் கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராசா, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment