கொழும்பு உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் கைதான திலினி பிரியமாலி என்ற பெண்ணின் நிதி நிறுவனத்தில் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் 15 கோடியும், முன்னாள் ஆளுநர் ஒருவரும் 10 கோடியும் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான முறைப்பாடு முன்னாள் ஆளுநரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதுடன், முன்னாள் அமைச்சரிடம் இருந்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சந்தேகநபருக்கு சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை, பிரபல பிக்கு ஒருவர் முதலீட்டிற்காக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கோடி ரூபாய் முதலீடு செய்தும் பலன் தராத நிலையில் அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது பிரபல நடிகை ஒருவர் அந்த நபர்களுடன் செல்போனில் பேசியதை பதிவு செய்து பணம் கேட்டவர்களை விடுவிக்குமாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கோடிஸ்வர தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் இலாப நோக்கம் கருதி வைப்புக்களை மேற்கொன்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் குறிப்பிட்ட வைப்புக்களுக்கான வட்டியினை செலுத்தாமை , அத்துடன் 226 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் 100,000 ஆகியவற்றை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் கைதான இந்த திகோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#srilankanews

