மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, பொதுமக்கள் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலிச் சட்டத்தரணியை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 8) உத்தரவிட்டார்.
குறித்த போலிச் சட்டத்தரணி கடந்த நவம்பர் 8ஆம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீடு ஒன்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் வழக்காடித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.
அத்துடன், சில சட்டத்தரணிகளையும் அவர் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்று சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

