திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூரல் பகுதியில் வீசிய காற்றால் 38 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
உப்பூரல் பிரதேசத்தில் பலத்த மழையுடன் வீசிய காற்றால் மேற்படி வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மீனவர்களின் வள்ளங்கள் சிலவும் உடைந்துள்ளன.
இதேவேளை, மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழையால் ஏற்பட்ட சேத விபரங்களை வெருகல் பிரதேச செயலகம் ஊடாகத் திரட்டி வருவதாகவும், இதுவரைக்கும் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.
அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்து தகவல்களைப் பெற்று மாவட்ட அரச அதிபரின் ஆலோசனையின் பேரில் வெருகல் பிரதேச செயலாளரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews