செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை தொடர்பில் கோரிக்கை

2

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணை சர்வதேச விசாரணையாகி எம்மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பாக தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது. சித்துபாத்தி இந்து மயானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புகள், எலும்புக்கூடுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

எத்தனை பேரை இழந்து எத்தனை பேர் காணாமல் போன சூழலில் கவலையோடு இருக்கின்ற போது இந்த புதைகுழி அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் தந்திருக்கின்றது.

எனவே இந்த செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும். சர்வதேச ரீதியாக விசாரணை இடம்பெற வேண்டும். ஒரு உண்மையான தீர்வு இந்த விடயத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதே வேளையில் இந்த விசாரணை தொடர வேண்டும். இந்த விசாரணை ஊடாக தமிழினத்திற்கு நடைபெற்ற கொடுமை ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

Exit mobile version