வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரசன்ன மணி எக்ஸ்சேன்ஜ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நாணய மாற்று அனுமதிப்பத்திரத்தை நிரந்தரமாக இரத்து செய்ய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் செய்த விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் (சட்டம்) 11 (3)ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, கொழும்பு 01 மற்றும் வெள்ளவத்தையில் இயங்கிய தலைமை அலுவலகத்திலும் கிளையிலும் நாணய மாற்று தொழிலில் ஈடுபடுவதற்கு பிரசன்ன மணி எக்சேன்ஜ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கம்பனி மூலம் புரியப்பட்ட இணங்காமைகள் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய DFE/RD/0058 ஆம் இலக்க அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாக இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநரொருவராக பிரசன்ன மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட், நாணய மாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேலும் அனுமதிக்கப்படவில்லை என வங்கி அறிவித்துள்ளது.
பிரசன்ன மணி எக்சேன்ஜ் நிறுவனத்துடன் வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல், விற்பனைசெய்தல் மற்றும் பரிமாற்றம்செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகக் கருதப்படும் எனவும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment