துமிந்தவைக் கைதுசெய்து சிறையில் அடைக்குக! – நீதிமன்றம் உத்தரவு

Duminda e1654006005405

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலை வழக்கு தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றத்தால் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், துமிந்த சில்வாவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version