ஒளிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – கிளிநொச்சியில் அநுர
ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய வாக்குகளால் பல அரசுகள் உருவாகியிருக்கின்றன.
ஆனால், அந்த அரசாங்கங்களால் இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். யுத்தம் உருவானது. கல்வி, சுகாதாரம் அழிந்தது.
இத்தனைக்கும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்தார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்தார்கள்.
அதனால்தான் மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.
நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் தீர்வு கிடைக்கும். நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.