மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்து அங்கு சொகுசு இல்லத்தை நிர்மாணித்தமையின் ஊடாக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பானஉத்தரவு அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்படவிருந்தது.
எனினும், வழக்கின் பிரதிவாதிகள் நேற்று மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
முதலாவது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச நாட்டின் தற்போதைய நிலை காரணமாகவும், திருக்குமார் நடேசன் சுகவீனம் காரணமாகவும் மன்றில் முன்னிலையாகவில்லை என அவர்களது சட்டத்தரணி மன்றுரைத்தார்.
#SriLankaNews
Leave a comment