ஆதிசிவன் ஆலயம் மீண்டும் கட்டியெழுப்பப்படும்!

douglas devananda 1

துஷ்டர்களினால் சின்னா பின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் கடற்றொழில் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர பஸ் நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என்றார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானும்  தன்னோடு இணைந்து வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக  அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை  பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி பஸ் மத்திய நிலையம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இலங்கை போக்குவரத்து சபையினரும்  தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே மக்களுக்கு சிறந்த சேவையை பஸ்  நிலையத்தினூடாக வழங்கக் கூடியதாக இருக்கும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் மக்கள் சேவையை மனதில் கொள்ளாமல் இலாபமீட்டும் நோக்கில்  செயற்படுவதாலேயே பிரச்சினைகள் எழுகின்றன.  இதனால் பேருந்துகளில் பயணிப்போர் மாத்திரமல்ல வீதியில்  செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பாக யாழ். மாவட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது ஆராயவுள்ளதுடன், இது தொடர்பில் யாழ் உட்பட வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட தலைவர்களிடமும்  பொலிஸ் உயரதிகாரிகளுடனும்  கேட்டுக்கொள்ள இருக்கின்றேன்” என்றார்.

#SriLankaNews

Exit mobile version