ஊழலில் மூழ்கும் நாடு! – சஜித் ஆவேசம்
தற்போதைய அரசாங்கம் நாட்டை ஊழல் நிறைந்த நாடாக மாற்றி பொருளாதார வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன, ஒருபுறம் தரவுகள் அழிப்பு, மறுபுறம் அன்டிஜென் ஊழல் மற்றும் மருந்துகள் வர்த்தகம் என பல்வேறுபட்ட மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக்குவதுடன் அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர்.
லஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு அதிகபட்ச இடமளிக்கும் ஒரு அரசாங்கம் நாட்டில் செயற்பட்டு வருகின்றது.
மக்களுக்கு சேவை செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், அரசாங்கம் தனது உற்ற நண்பர்களுக்கு சேவை செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது.
இந்தப் பேரழிவு தருணத்தில் கூட, அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்பார்வையிடும் எம்.பி.க்களை நியமிப்பதன் மூலம் பொதுச் செல்வத்தை அழித்து வருகிறது. உண்மையில் மக்கள் குறித்த கரிசனை இருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போசித்து அவர்களை அபிவிருத்தி செய்வதைவிட மக்கள் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதே நன்று.
அரசாங்கம் தனது உறுப்பினர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்க நடவடிக்கை எடுத்தபோதிலும், மக்களின் நலனுக்காக எதையும் கொடுக்க அரசாங்கம் தயாராக இல்லை. இந்த சகல செயற்பாடுகளுக்கும் நிதி மக்கள் வரிப்பணத்திலிருந்தே செலவளிக்கப்படுவதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.