நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பானம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெடஓய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புகளில் அனுமதிப்பத்திரமின்றி டிரக்டர்களில் மணல் ஏற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து இரண்டு டிரக்டர்களும், ஜே.சி.பி. இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொத்துவில், திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 33, 34 மற்றும் 52 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் வாகரை மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் காடழிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது என வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் இவரிடமிருந்து 33.75 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அத்துடன் 178 லீற்றர் கோடா, ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment