எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நான்கு நாள் சீன உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முதலீடு, மின்சாரத் துறை, கடற்தொழில் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளும் இதில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herat) கூறியுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கு சீனாவின் ஆதரவை இலங்கை நாடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கான சீனாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவுதுறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், அநுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்,
அத்துடன், சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோரையும் அவர் சந்திப்பார்.