அரச வங்கியில் 68 மில்லியன் பண மோசடி! – முகாமையாளருக்கு மறியல்

law

அரச வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கே விளக்கமறியல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 48 தனிநபர் கடன் ஆவணங்கள் மூலம் ஆறு கோடியே 83 லட்சத்து 40,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட நீண்ட கால விசாரணையின் பின்னர் கடந்த 5ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் பண மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபர் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற 62 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version