சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டலக்குடா கிராமம்.
கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது போக எஞ்சிய 181 பொதிகள், அங்கிருந்த மரண விசாரணை அதிகாரி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இனந்தெரியாத நபர்கள் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி உள்ளே புகுந்துள்ளனர்.
சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 55 உலர் உணவுப் பொதிகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மண்டலக்குடா கிராம அலுவலரால் நேற்று (27) சனிக்கிழமை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களைத் திருடிய மனிதாபிமானமற்ற இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.