4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த 25 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய, இன்று (15) தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்ட அவர், ஆவணங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் தாமதமானதால் 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவே அவை தேங்கியுள்ளதாகவும் அவற்றுக்கு தாமதக் கட்டணமாக 40 இலட்சம் செலுத்த வேண்டியுள்ளதால் பால்மாவின் விலையை அதிகரிக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கப்பலில் பால்மாவை ஏற்றும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் பயணிக்கும் போது மற்றொரு சட்டமும், கொழும்பு துறைமுகத்தை கப்பல் நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொள்கலன்களை விடுவிப்பதற்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், பால்மா கொள்கலன்களை விடுவிக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் உப்புல்மலி பிரேமதிலக்கவிடம் வினவியபோது, திணைக்களத்தில் வினைத்திறனற்ற நிலைமை இல்லை எனவும் கட்டுப்பாட்டாளர் என்ற வகையில் தாம் எவ்வித ஆவணங்களையும் மறைக்கவில்லை என்றார்.
மேலும், பால்மா பிரச்சினை குறித்து சரியாகத் தெரியவில்லை எனவும் பொதுச் சட்டத்துக்கு மாறாக இறக்குமதி செய்யப்பட்டால் அதனை எக்காரணம் கொண்டும் விடுவிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment