இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் நோயாளி சடலமாக மீட்பு!

Published

on

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனநோய் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ தினமான இரவு 7.45 மணிக்குக் கடைசியாக விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டுச் சென்ற பின்னர், மலசலம் கழிப்பதற்காகக் குறித்த நபரை, அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் மலசலகூடத்துக்குக் கூட்டிச் சென்று விட்டு வெளியில் காத்திருந்துள்ளார்.

மலசலகூடத்துக்குள் சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து, உறவினர் கதவைத் திறந்த பார்த்தபோது குறித்த நபர் மலசலகூட யன்னல் கம்பியில் உடுத்திருந்த சாரத்தைப் பயன்படுத்தித் தூக்கில் தொங்கியிருந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை ப் பெற்று சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version