அரசியல்
கட்சி உறுப்புரிமையிலிருந்து ஹரின், மனுஷ நீக்கம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தனர்.
இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவியேற்றனர்.
புதிய அரசின் நாட்டுக்கான நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், கட்சியின் தீர்மானத்தை மீறியமைக்காக அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login