இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு குறுகிய நிலப்பரப்பில் முடங்கி இருந்த வேளையில் அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் – பேரவலத்தின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
அதேபோன்று தமிழர் தாயகம் எங்கும் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் இந்நாள் பெரும் உணர்வுபூர்வமாக அமைதியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வில் இறுதிப் போரில் தனது ஒரு கையை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியமையைத் தொடர்ந்து ஏனைய மக்கள் தமது உறவுகளுக்கான சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே, அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் இன்றும் வழங்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment