அரசியல்

21ஆவது திருத்தம்: சட்டமா அதிபருடன் ரணில் பேச்சு!

Published

on

செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்து மீண்டும் நாடாளுமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் இன்று கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து அந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நல்லாட்சி அரசால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கொண்டுவந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற வகையில் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுநிலையினர் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருந்தன.

20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கும் 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான 21ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சட்டமா அதிபருடன் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version