இலங்கையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு புறத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெறுவதுடன், மறுபுறத்தில் மோதல் சம்பவங்களும் இடம்பெற தொடங்கியுள்ளன. இதனால் வரிசை என்பது வன்முறை களமாக மாறிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்கள் கடும் விரக்தியுடன் காணப்படுவதால் எவராவது வரிசையை மீறினால் அல்லது வேறு நபர்களுக்கு இடமளிக்க முற்பட்டால் அங்கு மோதல் நிலை உருவாவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெற்ற மோதலொன்று கொலையில் முடிந்துள்ளது.
நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்புவதற்கு வரிசையில் காத்திருந்த ஆட்டோ சாரதி ஒருவருக்கும், சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து சைக்கிள் ஓட்டுநரை, ஆட்டோ சாரதி கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாமயடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் ஆட்டோ சாரதி – அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பமானது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, எரிபொருள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த இரு முதியவர்கள் மயங்கி விழுந்து பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment